பிளாஸ்மா திரவத்தில் மிதந்து கொண்டிருக்கின்றன. இந்த புரதங்கள் உடல் வலிமையை கூட்டவும், செல் வளர்ச்சியை சீர்படுத்தவும் அத்தியாவசிய அமினோ அமிலங்களை ஏற்றுக்கொள்ளவும் உதவுவதுடன் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கும் இம்மியுனோ குளோபுளின்களின் பலவகையான பரிணாம மற்றும் பரிமாற்றங்களை கட்டுப்படுத்தவும் பயன்படுகின்றன.
புரதங்களின் பல அவதாரங்களில் ஒன்றுதான் நோய் எதிர்ப்பு சக்தியாகும். உடலின் நோய் எதிர்ப்பு சக்திக்கு ஆதாரமான ஆன்டிஜன் ஆன்டிபாடி செயல்பாட்டை கட்டுப்படுத்தும் புரத அமைப்பானது சீராக இல்லையயனில் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவதுடன் ஆட்டோ இம்மியுன் என்று சொல்லப்படும் சுய குறை நோய் எதிர்ப்புத் தன்மையால் பலவகையான தொற்று நோய்களும் தன்னிச்சையான குறை எதிர்ப்பு சார்ந்த நோய்களும் உண்டாகின்றன.
நோய் எதிர்ப்பு குறைவால் கழுத்து, அக்குள், அடிவயிறு, தொடையிடுக்கு பகுதிகளில் உள்ள லிம் திரவ முடிச்சுகளில் நெறி கட்டுகின்றன. அடிக்கடி சளி பிடித்தல், சுரம் உண்டாதல் போன்ற சுவாச நோய்கள் தோன்றுகின்றன. தோல் வறட்சி, சோரியாசிஸ், கரப்பான், அத்திக்காய் குட்டம் போன்ற தோல் நோய்களும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவால் தான் உண்டாகின்றன. இவை தவிர மாறி, மாறி மூட்டுகளில் வலி மற்றும் வீக்கத்தை உண்டாக்கும் சர்வாங்கி வாதம் போன்ற மூட்டு அழற்சி நோய்களும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவால் அதிகப்படுகின்றன.
நோய் எதிர்ப்பு சக்தி குறைவால் எய்ட்ஸ் நோயாளிகள், காசநோய் நோயாளிகள் மற்றும் குறைமாதத்தில் பிறந்த குழந்தைகள் பலவித தொந்தரவுகளுக்கு உள்ளாகின்றனர். நாட்பட்ட நோய் எதிர்ப்பு சக்தி குறைபாட்டால் உடல் உருக்குலைதல், எடை மாற்றம், பொதுவான உடல் பலஹீனம், எளிதில் பல நோய்களுக்கு ஆட்படுதல் போன்ற தொல்லைகள் தோன்றுகின்றன.
நோய் எதிர்ப்பு சக்தி குறைபாட்டால் இளம் வயதிலேயே முதுமையைப் போன்ற உருவ மாற்றம் ஏற்படுகிறது. இளநரை, பார்வை குறைபாடு, தோல் வறட்சி, தோல் சுருக்கம், மடிப்புள்ள பகுதிகளில் சதை தொங்குதல் போன்ற பல குறைபாடுகள் நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்களுக்கு ஊட்டச்சத்து குறைபாட்டாலும், பிற நோய்களுக்கு எடுத்துக் கொள்ளும் மருந்துகளினால் பக்கவிளைவுகளினாலும் தோன்றுகின்றன. இளம் வயதினரும், நடுத்தர வயதினரும் தற்சமயம் நோய் எதிர்ப்பு சக்தி குறைபாட்டிற்கு ஆளாகி வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
கொட்டைக்கரந்தை
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தி, செல்களின் அழிவை கட்டுப்படுத்தி, உடல் உறுப்புகளுக்கு வலிமையையும், உடலுக்கு ஊட்டத்தையும் தரும் அற்புத மூலிகை கொட்டை கரந்தை. ஸ்பேரான்தஸ் இன்டிகஸ் என்ற தாவரவியல் பெயர் கொண்ட அஸ்டரேசியே குடும்பத்தைச் சார்ந்த இந்த சிறு செடிகள் வயலோரங்களில் களைச்செடியாக வளருகின்றன.
பூக்காத அல்லது பூக்க ஆரம்பித்துள்ள கொட்டைகரந்தை செடியின் இலைகளில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் ஏராளமான வேதிச் சத்துக்கள் அடங்கியுள்ளன. மெத்தில் சேவிகால், ஆல்பா அயனோன், டிகாடினின், மெத்தாக்சி சின்னமால்டிகைடு, ஸ்பேரான்திம், ஸ்பேரான்தனோலாய்டு, பீட்டா சைட்டோஸ்டீரால், ஸ்டிக்மா ஸ்டீரால், யுடெஸ்மோனலைடு, கிரிப்டோ மெரிடியால் போன்ற வேதிப்பொருட்கள் நோய் எதிர்ப்பு சக்திக்கு காரணமான இம்மினோ குளோபுளின்களை சீர் செய்வதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
பூக்காத கொட்டைகரந்தை செடிகளின் இலைகளை நிழலில் உலர்த்தி பொடித்து வைத்துக் கொள்ள வேண்டும். தினமும் 1 முதல் 2 கிராமளவு தேனுடன் கலந்து சாப்பிட நோய் எதிர்ப்பு சக்தி அதிகப்படுவதுடன் பார்வை கூர்மை அடையும். இளநரை மாறும்.
வாசகர் கேள்வி : எனது குழந்தைக்கு வயது 8 ஆகிறது. சிறு வயதிலிருந்தே இரைப்பு நோய் உள்ளது. இதனால் அவளுக்கு குளிர்ந்த பொருட்கள் எதையும் கொடுப்பதில்லை. பனிக்காலம் என்பதால் இரைப்பு அதிகமாக உள்ளது. ஆனால் அவள் சாக்லேட்டை அதிகம் சாப்பிடுவாள். சாக்லேட் காரணமாக இரைப்பு அதிகமாக உள்ளதா? இதற்கு மருந்து கூறவும்.
மருத்துவர் பதில்: சாக்லேட் போன்றவற்றிலுள்ள வேதிப்பொருட்களும், செயற்கை உணவு பதனிகளும் பலருக்கு பலவிதமான ஒவ்வாமைகளை ஏற்படுத்துகின்றன. பெரும்பாலும் இவற்றை தவிர்ப்பது நல்லது. சாக்லேட்டுக்கு பதிலாக கடலைமிட்டாயை அளவோடு கொடுக்கலாம். இது நமது இந்திய குழந்தைகளுக்கு ஏற்ற புரதம் நிறைந்த உப உணவு. முசுமுசுக்கை இலைகளை நீரில் போட்டு கொதிக்க வைத்து கசாயம் செய்து கொடுக்க இரைப்பு தணியும். கருந்துளசி மற்றும் வெற்றிலை இலைச்சாற்றை மார்பு மற்றும் முதுகில் தடவி வர இரைப்பு தணியும்.
பாலில் அனைத்து வகையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருந்தாலும் அதில் வைட்டமின் சி கிடையாது. அதுபோல் இரும்புச் சத்தும், வைட்டமின் டியும் குறைந்த அளவிலேயே காணப்படுகின்றன. ஆகவே பிறந்த குழந்தைகளுக்கு 6 மாதம் நிறைவடைந்ததும் கொஞ்சங் கொஞ்சமாக காய்கறிச்சாறு, பழச்சாறு, வேகவைத்த முட்டை, நன்கு வேகவைத்த மாமிசம் மற்றும் பருப்புகளை கொஞ்சங் கொஞ்சமாக கொடுத்து வர வேண்டும்.
பசும்பாலில் இருந்து தயார் செய்யப்படும் உடனடி பால் பொடியில் 26 சதவீதம் புரதமும், 26 சதவீதம் கொழுப்பும் காணப்பட வேண்டும். ஆனால் தற்சமயம் வெளிச்சந்தையில் கிடைக்கும் உடனடி பால் பொடியில் 14 சதவீதம் புரதமும், 10 சதவீதம் கொழுப்புமே காணப்படுகிறது. ஆகவே பசும்பால் கொடுக்க வாய்ப்பில்லாத குழந்தைகளுக்கு தங்களது மருத்துவரை ஆலோசித்து தரமான உடனடி பால்பொடியை குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுப்பது நல்லது.
4தமிழ்மீடியாவுக்காக: டாக்டர்.ஜெ.ஜெயவெங்கடேஷ், மதுரை.

No comments:
Post a Comment